திங்கள், மே 10

நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் ல் அடை அவியல்






நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் ல் அடை அவியல்
நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் உலகின் மிக அதிகமான
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்ககூடிய ஓர் இடம்
எங்களையும் வா வா என்று அழைத்தது. தினம் ஏதேனும் ஒரு
நியுஸ் அந்த இடத்தைப் பற்றி இல்லாமல் இருக்காது."சரி"
என்று நாங்களும் போவதற்குக் கிளம்பினோம்.
பொதுவாகவே நாங்கள் ஊர் சுற்றிப் பார்ப்பது என்றால்,கையில்
சாப்பாட்டு மூட்டையுடன் தான் கிளம்புவோம்.அது எங்கள்
ஸ்பெசாலிட்டி. இப்படித் தான் முன்னர் வாஷிங்டன் சென்ற
போது, சாப்பாடு மூட்டையை வெளியே வைத்து விட்டு உள்ளே
செல்லுங்கள்,என்ற போது, நீயும் ஆச்சு,உன் அசெம்ப்ளியும் ஆச்சு
என்று சொல்லிவிட்டு பார்க்காமலேயே வந்தது தனிக் கதை.
உடனே என் தர்ம பத்தினியும், எல்லோருக்கும் அடையும்,
அவியலும் தயார் செய்து விடலாம் என்றாள்.
ஏனெனில்,அவளுக்கு ரொம்ப நாளாகவே அடையில் ஒரு கண்.
(அவர்கள் குடும்பத்தில் அடை சாப்பிட்டே சொத்தை அழித்தது
ஒரு தனிக் கதையாக எழுதலாம்).
நியூயார்க் நகரம் ஒரு சொர்க்கம் என்றால் மிகைஅல்ல, ஆம்,
அவ்வளவு ஈர்க்கக் கூடிய இடம். பகலில் மேகத்தைமுட்டக்
கூடிய கட்டிடங்களைப் பார்த்தே நமக்கு கழுத்து சுளுக்கி விடும்
என்றால், இரவு அங்கு உள்ள விளக்கு அலங்காரங்களைப்
பார்த்து நம் கண்கள் வலி எடுத்து விடும் என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள். அதிலும் டைம் ஸ்கொயர், (அது என்ன சதுரமோ,
செவ்வகமோ என்று நினைக்காதீர்கள்,அந்த இடத்திற்கு 1904 ல்
டைம்ஸ் பத்திரிகை குடி போனதால் அப்பெயர் வந்ததாம்.விக்கி
பீடியா உபயத்தில் இதை எழுதி உள்ளேன்.மேலும் நிறைய
மீடியா ஆபீஸ் அலுவலகங்கள் உள்ளதாலும் அந்த இடம் அப்படி
அழைக்கப் படுகிறதாம்).,கேட்கவே வேண்டாம். ஸ்வர்க்கம்
உண்டா, இல்லையா என்று சந்தேகப்பட்டுக்
கொண்டிருக்கவேண்டாம், நேராக டைம் ஸ்கொயருக்குப்
போங்கள் .உண்டு என்பீர்கள்.
"அது சரி, விஷயத்துக் வா", என்பது எனக்குக் கேட்கிறது.
"சரி", வந்துவிட்டேன்.
நியூயார்க் நகரைப் பகலில் முன்னேரே
பார்த்துவிட்டதால்,இரவு பார்க்கலாம் என்று
நான்,மாப்பிள்ளை,பெண், பேத்தி,புதிய உதயம் "பேரன்" சகிதம்
ஒரு நாள் மாலை கிளம்பினோம்.
சகுனம் பார்த்துவிட்டு கிளம்பி இருக்கலாம்.
"ஏன்" என்று கேட்கின்றீர்களா?
விஷயம் உள்ளது,சொல்கிறேன். நியூயார்க் சொர்க்கம் என்றேன்
அல்லவா? அதனால் டோல் கேட்டில் ஒவ்வொருவராக உள்ளே
செல்ல தனியாக ஒரு மணி நேரம்
காக்க வைத்ததைத் தான் சொல்கிறேன்.
எப்படியோ ஒரு வழியாக சொர்க்கத்தில் நுழைந்து, டைம்ஸ்
ஸ்கொயருக்கு வந்து, கால் கடுக்க,நேரம் போவது தெரியாமல்
சுற்றினோம்.
பசி எடுத்ததுடன் எங்காவது அமரலாம் என்று பார்த்தோம்.
புண்ணியவான்கள் நிறையப் பேர் உண்டு அங்கு என்று
நினைக்கிறேன், நிறைய நாற்காலிகள்
போட்டிருந்தார்கள்.ஆளுக்கு ஒன்றில் அமர்ந்து,பொட்டலத்தைப்
பிரிக்கத் துவங்கினோம்!
அடை பொட்டலம்,வெங்காயச் சட்டினி, சாம்பார்,
அவியல்,மிளகாய்ப்பொடி என்று எல்லாவற்றையும் திறந்து
வைத்தோம். எங்கிருந்தோ ஒரு போலிஸ்காரர் எங்களிடம்
வந்தார்.
எங்களுக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. நாங்கள் என்ன தவறு
செய்து விட்டோம் என்று
"What are you doing?" என்று
எங்களிடம் கேட்டார்.
"நாங்கள் டிபன் சாப்பிடுகிறோம்." என்றோம்.
"what is this in red colour? what is the paste?, I suspect
something foulplay here."
என்று எங்கள் சட்னி,சிவப்பு
மிளகாய்ப்பொடி மற்றும் அவியல்,
சாம்பாரைப் பார்த்து விட்டு, சரமாரியாக கேள்வி கேட்கத்
துவங்கினார்.நாங்கள் அவை எல்லாம் என்ன,அவை இல்லாமல்
தமிழ் நாடே இல்லை என்று ஒவ்வொன்றாய் விளக்கிச்
சொன்னோம்.
ஆனால் அவரின் சந்தேகம் தெளியவில்லை.
"It is our Tamil nadu,India's ,famous tiffen."ADAI AVIYAL . All
the people in tamilnadu goes with it. If you taste this, u will
agree" என்றோம்.
சந்தேகம் தெளியவில்லை என்பது அவர் முகத்தைப் பார்த்தாலே
தெரிந்தது.
நாங்கள் "உங்களுக்குச் சந்தேகம் தெளியவில்லை
என்றால்,இங்கு உள்ள சரவணபவன் "செப்" யாரையாவது
கூப்பிட்டு கேட்டுப் பாருங்கள் என்று சொன்னோம். உடனே
யாருக்கோ போன் செய்தார்.அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
ஒருவர் வந்தார், நாங்கள் அவர் சரவணபவன் "செப்" என்று
நினைத்தோம். எங்களைப் பார்த்து விட்டு,எங்கள் டிபனையும்
பார்த்து விட்டு போலிஸ்க்காரிடம் எல்லாவறையும் விளக்கினார்.
"YES, NOW I AM CONVINCED. SORRY FOR THE TROUBLE.
PLEASE U CONTINUE YOUR TIFFEN" என்று எங்களைப்
பார்த்து சொல்லிவிட்டு கைகுலுக்கி விட்டு சென்றார்.
"அப்பாடா", எப்போது தான் எங்களுக்கு மூச்சே வந்தது.
இந்தக் களேபரங்கள் முடிய கிட்டத்தட்ட அரை மணி நேரம்
ஆகிவிட்டது. மணி இரவு 12 .இனி எங்கே டிபனைச் சாப்பிடுவது!!!!
கொண்டு வந்த மோரை ஆளுக்கு ஒரு டம்ளர் சாப்பிட்டுவிட்டு,
பொட்டலங்களை பேக் செய்து,காரை நோக்கி நடையை
கட்டினோம்.
இப்படியாக எங்கள் நியூயார்க் விஜயம் பொசுக்கென்று முடிந்தது
எங்களுக்கு வருத்தம் தான்.
மிகப் பெரிய வருத்தம் என்னவென்றால் "என் மனைவி செய்த
மிகச் சிறந்த அடை சாப்பிடமுடியவில்லையே" என்பது தான்.
"என்னடா, இவன் கப்சா விடுகிறானே?" என்று நினைக்கத்
தோன்றுகிறதா? அதனால் தான் நாங்கள் சாப்பிட உட்கார்ந்த
போட்டோவை போட்டு இருக்கிறேன்.
மேலும் சந்தேகம் வந்தால் நியூயார்க் போலிஸ் வசம் கேட்டுப்
பாருங்கள்.அவர்கள் அந்த கூட்டத்தில் ஒரு "ஈ" உட்கார்ந்ததைக்
கூட,அங்கு உள்ள காமிராக்கள் படம் பிடித்து இருக்கும்.
நாங்களும் டிபன் சாப்பிட உட்கார்ந்ததை உங்களுக்குக்
காண்பிக்கும். சமீபத்தில் காரில் குண்டு வைத்தவனை ஒரே
நாளில் அங்கு உள்ள காமிராக்கள் மூலம் கண்டுபிடித்தார்கள்
என்றால்,அவர்கள் எவ்வளவு சுருசுருப்பானவர்கள் பாருங்கள்.
"HATS OFF TO NEWYORK POLICE DEPARTMENT."

1 கருத்து: