ஞாயிறு, நவம்பர் 27

கற்றலின் கேட்டல் நன்று!!!!!!

கற்றலின் கேட்டல் நன்று!!!!!

சொல்லுவது எளிது தான் நினைக்கத் தோன்றும்.எப்படின்னு கேட்கிறிர்களா/
"சொல்றேன், நமக்குத் தெரிந்ததைச் சொல்லிவிட்டுப் போயிடலாம் தானே?
ஒரு ஆசிரியர் இருக்கார், அவர் என்ன பண்றார்  தினம் வரார், மாணவர்களுக்கு
பாடம் எடுக்கிறார், கவலைப் படாமல் போகிறார்.
மாணவர்கள் அவர் சொல்வதை எல்லாம் நன்றாகக் கேட்டு, புரிந்து கொண்டு அதைப் பரிட்ஷையில் ஒழுங்காக எழுதினால் தான் அடுத்த வகுப்புக்குப் போகமுடிய்ம்.
ஆசிரியருக்கு இந்த பயம் எல்லாம் கிடையாதே?"
"இப்படித்தான் நான் படிக்கும் போது ஒரு ஆசிரியர் வகுப்புக் வருவார், எங்களையெல்லாம்  பார்த்து, "எலே பசங்களா, இந்தப் புஸ்தகத்தில் இருந்து ஒழுங்காக ஆளுக்கு ஒரு பாரா படியுங்க, வகுப்பு முடியும் போது மணி அடிச்சா என்னை எழுப்பி விடுங்கடா"
என்று சொல்லி விட்டு அவர் பாட்டுக்கு நாற்காலியில் உட்கார்ந்து தூங்க ஆரம்பிச்சு விடுவார்.
அதனாலே ஆசிரியர் உத்தியோகம் ரொம்ப சுலபம் இல்லையா?"
இப்படி யோசிக்கிறான் மாணவன்.
இதே கேள்வியை ஆசிரியர் எப்படிச் சொல்றார் பாருங்கள்.
" என்ன  சார், இப்படிச் சொல்லி விட்டிங்க, மாணவனுக்கு ஒழுங்காக, அவனுக்குப்  புரியும் படி,சொல்லிக் கொடுத்தால் தான் அவன் ஒழுங்காக எழுத முடியும். இல்லாட்டா  பாசாகமுடியுமா?
" ஆசிரியர் ஒரு மணி நேரம் பாடம் நடத்த, அவர் வீட்டில் பல மணி நேரம் பல
புத்தகங்களை படித்து விட்டு வந்தால்தான் நல்ல முறையில் நடத்த முடியும்.
அந்த ஆசிரியரைத் தான் நல்ல ஆசிரியர் என்று போற்றுவார்கள்.
"ஆசிரியர் பாடம் நடத்தும் போது எங்கேயாவது உட்கார்ந்து பாடம் நடத்துவதைப் பார்த்து உள்ளீர்களா? ஒரு மணி ஆனாலும், இரண்டு மணியானாலும் நின்று கொண்டுதானே  பாடம் நடத்த வேண்டும். மாணவனுக்கு அப்படியில்லை. அவன் எப்படியாவது, எங்காவது
பார்த்துக் உட்கார்ந்து கவனித்தால் போதும்."
"இப்படித்தான் ஒருநாள் நான் பாடம் நடத்தி விட்டு ஒரு மாணவனை எழுப்பி,
"என்ன, சுரேஷ், எல்லாம் நுழைந்ததா?" (அதாவது பாடம் எல்லாம் புரிந்ததா என்ற  அர்த்தத்தில்) என்று கேட்கிறேன். அவன் மெதுவாக எழுந்து, "இன்னும் வால் மட்டும்தான்  நுழையுனும்  சார்" என்றானே பார்க்கணும்.
"ஏனடா, நான் ஒண்ணு கேட்டால் நீ என்ன பதில் சொல்றே?" என்று கேட்டவுடன்,  பக்கத்தில் உள்ள பையன், "சார், அவன் கூறையைப் பார்த்துச் அங்குள்ள அணில்  உள்ளே நுழைவதைப் பார்த்துச் இன்னும் வால்மட்டும்தான் நுழைய வில்லை என்கிறான் சார்."
எப்படி இருக்கும் எனக்கு!!! இது தேவலாம், இங்கே பாருங்கள் இந்தப் பையனை,
"இப்படித்தான் ஒரு நாள் நான் பக்கத்து வீட்டு பையன் என்னவோ ஸ்லோஹம் சொல்லறான்  போய் "என்னடா சொல்லறே?, திருப்பிச் சொல்லுடா",ன்னு கேட்டா, ரொம்ப அழுத்திக் கேட்ட  பிறகு சொல்றான், "நித்தம் நித்தம் இந்த இழவா, வாத்தியார் சாவாரா?,வயத்தெரிச்சல் தீராதா?"
அப்படின்னு பாடறான் சார்." மாமா சொல்லிக் கொடுத்தார் என்கிறான்.
இந்த மாதிரிப் பையன்களைத் தேற்றி அடுத்த வகுப்புக்களுக்கு அனுப்புவது எவ்வளவு  சிரமம் பாருங்க.
அதனாலே "கேட்பது சுலபம். சொல்லறது கஷ்டம்",
அப்படிங்கறது ஆசிரியரைப் பொறுத்த மட்டில். இதுக்கே இப்படிச் சொல்லுறிங்களே?
ஒரு இடத்தில் உபன்யாசகர் பேசிக்கோண்டு இருக்கிறார், மற்றவர்கள் கேட்டுக் கொண்டு  இருக்கிறார்கள். எப்படி?
"சார், கொஞ்சம் தள்ளி உட்காருகிறீர்களா?
"என் சார்,"
"ஒண்ணுமில்லை, சுவத்தோட சாஞ்சு உட்காரலாமேன்னுதான்"
இப்படி கேட்பவர் வசதியாக உட்காரமுடியும். சொல்பவர் இப்படி சுவத்தோட சாஞ்சு  உட்கார்ந்துகொண்டு உபன்யாசம் செய்யமுடியுமா?
இதிகாசங்கள், புராணங்கள் இவற்றை எடுத்துக் கொள்வோம்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் யுத்தம் ஆரம்பிக்கப் போவதற்கு முன்னால்  என்னவாயிற்று? அர்ச்சுணன் யுத்தகளத்தில் போய் நின்று கொண்டு தன்னுடைய ஆசானுக்கு  எதிராக சண்டையிடுவதா?, அவர்களைக் கொல்வதா? என்று கலங்கி நின்ற போது, கிருஷ்ணன் என்ன செய்தான் பாருங்கள்.
ஷத்த்ரியன் நியதி என்ன, அவன் என்ன செய்யவேண்டும் என்று அவனுக்கு எழுநூறு  ஸ்லோகங்கள் கொண்ட கீதையை உபதேசித்தான். அங்கு கிருஷ்ணன் தேர்பாகனாக  இருந்து ஆசிரியர் ஸ்தானத்தில் உபதேசித்தான். கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம்  என்று எல்லாவற்றையும் உபதேசித்தான். யார் கேட்டார்கள்? அதை பின்தொடர்வது அவ்வாவு
எளிதா?
மக்கள் யாரும் கேட்க மாட்டார்கள் என்று அவனே பத்தாவது நாள், தருமபுத்திரர்  மற்றும்  எல்லோருடனும் சேர்ந்து கொண்டு பீஷ்மரிடம், "எந்த தெய்வத்தை வணங்குவது? எப்படி வணங்குவது?" போன்ற கேள்விகளுக்கு,பீஷ்மர் பதில் கூறியதை கிருஷ்ணன் கூட அமர்ந்து கேட்டான் இல்லையா?
அதாவது கண்ணன் "சொன்ன" கீதையை விட, பீஷ்மர் "சொல்ல, கண்ணன் கேட்ட"  சஹஸ்ரநாமத்திற்கு அதிக மதிப்பு இல்லையா? நாமும் தினமும் கீதை பாராயணம்  செய்வதில்லை, ஆனால் சஹஸ்ரநாமம் தினம் பாராயணம் செய்கிறோம். எனவே கேட்பது எளிதுதான், சொல்வதைவிட!!!`
எது எப்படியானாலும் பெரியோர் வாக்குப்படி "கற்றலின் கேட்டல் நன்று", என்றும் "யார் என்ன சொன்னாலும் அதனைப் பகுத்து, அதில் உள்ள உண்மைகளை அறிந்து அதன்படி  நடப்பது சாலச் சிறந்தது இல்லையா?

1 கருத்து:

  1. //"ஆசிரியர் பாடம் நடத்தும் போது எங்கேயாவது உட்கார்ந்து பாடம் நடத்துவதைப் பார்த்து உள்ளீர்களா? //

    பல ஆசிரியர்களுக்கே இது ஒரு நல்ல கேள்வி! அசமந்தமா உட்கார்ந்தே, அதுவும் இளம் வயசிலேயே வகுப்பெடுக்கும் சக ஆசிரியர்களைப் பார்க்கும்போது இந்த கேள்விதான் மனசுக்குள் வரும்!

    பதிலளிநீக்கு