ஞாயிறு, ஜனவரி 6

காதலாகிக் கசிந்து கண்ணீர் மலக

தாத்தா பேரன்





”தாத்தா, ஐ யம் கமிங் டு சீயங்கம், தாத்தா.”
முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு பேரன் என்னிடம் வந்து கூறினான்.
"என்னடி சொல்றான், இவன்”, பேரன் சொல்லும் மழலை எனக்கு புரியாததால் என் பெண்ணிடம் கேட்டேன். அவனுக்கு வயது மூணு தான். நான் என் பெண்ணுக்கு எல்லா அப்பாக்களும் அல்லது அம்மாக்களும் செய்யும் உதவிக்காக (ஆறு மாத கோர்ஸ், அதுக்குப் பிறகு இங்கு இருக்க
விடமாட்டார்கள்) அமெரிக்கா வந்த இடத்தில், கோர்ஸ் நடக்கும்
தருவாயில், என் பேரன் என்னிடம் பேசியது தான் மேலே சொன்ன
தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த வாக்கியம்.
“என்னப்பா, இது கூடவா உனக்கு புரியவில்லை, அவன் உன்னோட
ஸ்ரீரங்கத்துக்கு வரானாம்.”
“ஏண்டா, உன் அம்மா, அப்பா, அக்கா யாரும் வரமாட்டார்கள். நீ மட்டும்
வரயா?” இது நான்.
“நோ,நோ, ஐ யம் கமிங் டு சீயங்கம்”. அந்த ’நோ’ வை நீட்டிச் சொன்ன
அழகைப் பார்க்கவேண்டும்.
“அங்க வந்து என்னடா பண்ணபோறாய்?’
“சீயங்கம், ஒம்மாச்சி, காப்பாத்து”
“ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பெருமாள் கிட்ட காப்பாத்துன்னு கேட்கப் போறானாம்”

ஆனால் ஆறு மாதத்துக்கு முன்னால்.
விமான நிலையத்தில் வந்து இறங்கி வீட்டுக்கு வந்தவுடன்,
”தாத்தாகிட்ட போடா, இனிமேல் நாங்க ஆபிஸ் போன பிறகு தாத்தா தாண்டா உன்னோடு இருப்பா” என் பெண் தன் பையனிடம் கெஞ்சினாள்.
“நோ,நோ”, என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு கிட்ட வருவதற்கு அஞ்சினான் பேரன்.
“என்னப்பா இது, இப்படி பண்ணறான்”.
“விடுடி, பாத்துக்கலாம், ரெண்டு நாள் ஆனா எல்லாம் சரியாப் போயிடும்”
சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து, பெண்ணும் மாப்பிள்ளையும் வேலைக்குச் கிளம்பும் வரை பேரன் படுக்கையிலிருந்து எழுந்திருக்காமல் இருக்கவே,
“என்னப்பா பண்றது இப்ப?”
“அவனை எழுப்பி அவனிடம் ’நாங்கள் வேலைக்குப் போகப்போகிறோம்,
தாத்தாவுடன் இரு’ என்று சொல்லிவிட்டுப் போங்கள், நான் பார்த்துக்
கொள்கிறேன்,” என்று என் பெண்ணை சமாதானப் படுத்தினேன்.
 அவர்கள் பையனை சமாதானப் படுத்திவிட்டு ஆபீஸ் போன பிறகு,
”ஹேய், இங்க வாடா, பால் தரவா?” 

நான் பேரனிடம் பயம்
கலந்த மரியாதையுடன் கெஞ்சினேன்.
“யெஸ் தாத்தா, ஐ டிரின்க் மில்க், கிவ் மீ”, என்று நான்
எதிர்பார்க்காத வண்ணம் பாலை வாங்கி கிடுகிடுன்னு சாப்பிட்டான்.
“அப்பா, அம்மா, அக்காவெல்லாம் எங்கேன்னு தெரியுமாடா?”
“அம்மா ஆபீஸ், அப்பா ஆபீஸ், அக்கா ஃபூல்”. என்றானே பாக்கணும்.
ஸ்கூலுக்கு அக்கா போயிருக்காங்கிறதைத் தான், ”ஃபூல்” என்று
சொல்றானு சாயங்காலம் பெண் மொழி பெயர்த்த பிறகு தான் எனக்கு
அவன் பேச்சுப் புரிபட்டது.
பெண்ணும், மாப்பிள்ளையும் ஆபீஸிலிருந்து மணிக்கொருதரம் பேரன்
என்ன பண்றான்னு விஜாரித்துக் கொண்டே இருந்தார்கள்.
பத்து மணிக்கு சாப்பிட்டான். சிறிது நேரத்திலேயே, ‘ஆவ் கொண்டா
தாத்தா’, என்றான்.
’என்னடா சொல்றான் இவன்’, ஒன்னும் புரியாமல் நான் இருப்பதப் பார்த்து
அவனே நேரே படுக்கை அறைக்குப் போனான், போர்வையை எடுத்துக்
கொண்டு வந்தான், என் அருகில் வந்து, இது கூடத் தெரியவில்லையா
என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘ஆவ் போத்தி விடு தாத்தா’ன்னு
சொல்லிவிட்டு படுத்துக் கொண்டான்.
மறுநாள், ‘தாத்தா, ஐ ஷூட் யூ”, என்று சொல்லிக்கொண்டு ஒரு துப்பாக்கியை
காண்பித்து, அதை பிளாஸ்டிக் குண்டுகளால் நிரப்பச் சொன்னான்.
நானும் எதோ விளையாட்டுத் தானே என்று நிரப்பிக் கொடுத்தேன்.
அத்தோடு விட்டானா? இல்லை! என்னைக் குறிவைத்து சுட வேண்டியது,
மீண்டும் நிரப்ப வேண்டியது. இதையே மீண்டும், மீண்டும் செய்ய வைத்து
எனக்கு எப்படா நிறுத்துவான் என்று ஆகிவிட்டது.
என்னடா இவன் பேரனுக்கு இதுகூட செய்யக் கூடாதா என்று நீங்கள்
கேட்பது என் காதில் விழுகிறது!
நீங்கள் நினைப்பது போல துப்பாக்கியில் குண்டை நிரப்புவது
அவ்வளவு சுலபம் அல்ல. ஏனெனில் அதை செய்வதற்குள் எனக்கு
போதும் போதென்றாகிவிட்டது.
ரெண்டு நாள் ஆகியிருக்கும். சாப்பாடு சாப்பிட்டு விட்டு படுக்கும் போது,
‘தாத்தா, யூ ஈட் தாத்தா, ஐ ஸ்லீப்’, என்றானே பாக்கணும்.
நாம எப்படிப் பழகறோமோ அதுக்குத் தகுந்தாற்போல் குழந்தைகள் தங்களை மாற்றிக் கொண்டு விடுகின்றன்ர் என்பது அப்போது தான் எனக்குப் புரிந்தது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று பெரியவர்கள் சொன்னது சரிதான் போல.
அன்னைக்கு விடுமுறை என்பதால் எல்லோரும் வீட்டில் இருந்தார்கள்.
அப்போதும் போல நான் பேரனை பால் சாப்பிட கூப்பிட்டேன்.
‘நோ, ஐ யம் நாட் கமிங், ஐ வில் ஈட் அம்மா, யூ கோ அவுட்’, என்று சொல்லிக் கொண்டு அம்மாவிடம் போய் பால் சாப்பிடுவேன் என்று போய் விட்டான்.
நடுநடுவில் எனக்கு டைம் அவுட் கொடுத்துவிடுவான்.
அப்படின்னா என்ன்ங்கிரிங்களா?  என்னை ஒரு சேரில் உட்காத்தி
சிறிது நேரம் யாரும் என்னோடு பேசக் கூடாது.
அவன் அப்பா, அம்மாவிடம் செய்ய முடியாததை என்னிடம் செய்து
பார்த்து விடுவான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
இது மாதிரி பல சேட்டைகள்!!!
வீட்டில் அவர்கள் இருந்து விட்டால் என்னைப் பொருட்படுத்த மாட்டான்.
அன்று பூரா எனக்கு ஒரு மாதிரி இருக்கும். பெண்ணும்
‘வருத்தப் படாதே அப்பா, குழந்தைகள்னா அப்படித்தான் இருக்கும்,
நாளைக்கே உன்னிடம் வந்து விடுவான் பார்’ என்று என்னை
சமாதானப்படுத்துவாள்.
எனக்கும் இதுதான் யதார்த்தம், அதுக்குத் தகுந்தார்போல் நம்ம வாழ்க்கையை மாத்திக் கொள்ளணும் என்று புரிந்து கொள்வேன்.
கிளம்பும் நாளும் வந்தது.
“என்னடா, ஆர் யு கமிங் டு சீயங்கம், நாளைக்கு நான் ஊருக்குப் போகப்
போகிறேன்,’ என்றேன்.
“நோ தாத்தா, ஐ யம் நாட் கமிங், யூ கோ”. என்றானே பாக்கணும்.
எனக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
பேரனுடன் இருந்த அந்த ஆறு மாதங்களை மனதில் அசைபோட்டுக்
கொண்டு கண்களில் நீர் மல்க, சென்னை நோக்கி, விமானத்தில் ஏறினேன்.
அடுத்த தடவை பார்க்கும் போது அவனும் பெரியவனாகி
விடுவான்,  நமக்கும் வயதாகிவிடும்,
மீண்டும் எப்போது இந்த அனுபவம் கிடைக்கும் என்று நினைப்பில்,
இதனை எல்லா தாத்தா பாட்டிகளுக்கும் அர்ப்பணம் செய்கிறேன்.

தாத்தா பேரனுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக