சனி, ஆகஸ்ட் 31

போம் பழியெல்லாம் அமணன் தலையோடு போம்!!!!


என்னையா எழுதி இருக்கே, புரியவில்லையே?
யார் மேலே யார் பழி போடறாங்க?
இது ஒரு அரசனைப் பத்திங்க.


இதைப் படிச்சுட்டு ஏதோ நம்மூர்ல நடக்கற மாதிரி இருக்கேன்னு நினைச்சா
அதுக்கு நான் பொறுப்பல்ல, முன்னாலேயே சொல்லிட்டேன் என்ன!
அரசன்,
 'யாரங்கே! மாளிகை வாசல்ல இருக்கிற மணியை யாரோ அடிக்கறாங்க, யார்ன்னு  பாருங்க?'
 'யாரோ ஒரு பெண்மணி தான் மணியை அடிக்கிறாங்க அரசே ".
 "என்னம்மா உனக்கு பிரச்சனை? சும்மா இருக்க விடமாட்டிங்களே?"
 "எனக்கு நீதி வேண்டும் பெண்மணி? அரசே?"
 "நான் என்ன வச்சுண்டு தர மாட்டேன்னு சொன்னேனா, சொல்லும்மா என்ன விஷயம்?"
 "என் கணவன் இறந்து விட்டார் ஐயா."
 "எப்படி அம்மா இறந்தான்?"
 "அவர் ஒரு திருடன், நேற்றிரவு ஒரு வீட்டில் கன்னக்கோல் வச்சு திருடும் போது அந்த  வீட்டு சுவர் ஈரமா இருந்ததனாலே இடிஞ்சு, அவன் மேலே விழுந்து இறந்து விட்டார் ஐயா.  அதனாலே அந்த வீட்டுக்காரங்க எனக்கு நஷ்ட ஈடு தரணும்னு ஐயா உத்தரவு இடனும்."
 "இது நல்லா இருக்கே? கூப்பிடு அந்த வீட்டுக்காரனை? அவனுக்கு உடனே சம்மன்   அனுப்பு".
 மந்திரி உடனே எழுந்து, "அரசே, அவன் திருடன். ஒரு வீட்டில் திருடப் போய் இருக்கான்.  அவனை இறைவனே தண்டித்து இருக்கான். அதை விட்டுவிட்டு அந்த வீட்டுக்காரனை   தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?
 "மந்திரியாரே, நமது நாட்டில் நியாயம் செத்துவிட்டது என்று பின்னால் யாரும் சொல்லக்  கூடாது இல்லையா? அத்துடன் அரசனிடம் ஒரு பிரஜை மனு கொடுத்துள்ளாள்.  அதை விசாரிக்காமல் தீர்ப்பு கொடுத்துவிட்டான் சரித்திரத்தில் நாம் இடம் பெற்றுவிடுவோம்,  அது கூடாது மந்திரியாரே!"
 "நாளை நமது அரசபை கூடும். அந்த விட்டுக்கு சொந்தக்காரனை அரச சபையில் கொண்டு   வந்து நிறுத்த வேண்டும் என ஆணையிடுகிறேன். இத்தோடு அரச சபை கலையட்டும்."
  மறுநாள் காலை.
 வீட்டு சொந்தக்காரன், "அரசே, வீட்டு சுவர் இடிந்ததற்கு நான் காரணம் இல்லை."
 "பின் யார் காரணம் என்கிறாய்?"
 "அரசே,திருடன் வந்தபோது சுவர் ஈரமாக இருந்து இருக்கிறது. அதனால் தான் இடிந்து இருக்கிறது.  அதனால் சுவரைக் கட்டிய கொத்தனார் தான் திருடன் இறக்கக் காரணம். எனவே அவனை   விசாரித்துத் தீர்ப்புக் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்."  
 "மந்திரியாரே, இவன் சொல்வதும் சரிதான், கூப்பிடு அந்தக் கொத்தனாரை!"
 "அரசே, நீங்கள் செய்வது?"
 "சும்மா இரும், மந்திரி, எனக்கும் சட்டம் தெரியும்?"
 "நாளை கொத்தனாருடன் சபை கூடும்"
 "அரசே, நான் கொத்தனார், என்னிடம் என்ன கலவை கொடுக்கிறார்களோ, அதற்கு ஏற்பத் தான்   கட்டடம் அமையும் என்பது .புத்திசாலியான உங்களுக்குத் தெரியாதா? சித்தாள் அதிகத் தண்ணிரைக்   கலந்து வந்ததால் தான் சுவர் ஈரமாக இருந்து இருக்கிறது. எனவே சித்தாள் தான் திருடன் இறக்கக்   காரணம். என்னை விடுவிக்க வேண்டும் மன்னா."
 "நன்னா சொன்னே, நீ குற்றம் செய்யவில்லை. கூப்பிடு சித்தாளை!!"
 "மன்னா, நானோ படிக்காதவள், எனக்கு என்ன தெரியும் கலவையைப் பற்றியெல்லாம்?  இன்னைக்கு பார்த்து ஒரு பெரிய குடம் கொடுத்தார்கள், அதில் தண்ணீர் அதிகமாக  இருந்து இருக்கும், அதனால் நான் குற்றவாளி இல்லை. குடம் செய்த குயவனைத் கேட்க  வேண்டும் மன்னா."
 'ஆமாம், ஆமாம், நீ என்ன செய்வாய்? எல்லாவற்றுக்கும் காரணம் அந்த குயவன் தான்.
 யாரங்கே, கூப்பிடு அந்தக் குயவனை."
 "மன்னா, நான் குடம் செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியே ஒரு பெண் போய்க்   கொண்டிருந்தாள்,அவனைப் பார்த்துக்கொண்டே குடம் செய்ததால் கொஞ்சம் பெரிதாகப்   போய்விட்டது. என் மேல் என்ன தப்பு. எல்லாவற்றுக்கும் காரணம் அந்தப் பெண் தான் மன்னா. என்னை விடுவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்."
 "மந்திரியாரே, நான் அப்பவே சொல்லலை, எப்படிப் பாருங்கள் நம் திறமையை?'
 மந்திரி மன்னன் பாக்காத நிலையில் தலையில் அடித்துக் கொண்டார். இந்த மன்னனிடம் போய்  வேலைக்கு சேர்ந்தோமே என்று!!
 "நான் தான் மன்னா குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போன பெண்மணி."
 "ஆமாம், குயவன் குடம் செய்யும் போது அவனை ஒழுங்காக செய்யவிடாமல் என் செய்தாய்?  திருடன் இறந்ததற்கு நீ தான் காரணம். உனக்கு ஏன் தண்டனை தரக்கூடாது?"
 "மன்னா, மன்னியுங்கள். என் மேல் எந்த தவறும் இல்லை. நான் எனது துணிகளை வெளுக்க   வண்ணானிடம் கொடுத்து இருந்தேன். அவன்  திரும்பக் கொண்டு வர நேரம் ஆகியதால் அவனைப்  
 பார்த்து கேட்கலாம் என்று சென்று கொண்டிருந்தேன். என் மேல் எந்த.தவறும இல்லை மன்னா.  அந்த வண்ணான் தான் காரணமாக வேண்டும். அவனை தண்டியுங்கள் மன்னா."
 'மன்னா,துணிகளை வெளுக்க ஆறு பக்கம் சென்றேன். அங்கு ஒரு சன்யாசி உட்கார்ந்து இருந்தார்.  அவரை சற்றே விலகி இரும் ஐயா. என்றேன். நீண்ட நேரம் ஆன பிறகே அவர் அந்த இடத்தை   விட்டு விலகினார் அதனால் நேரம் ஆகிவிட்டது மன்னா. எனவே அந்த சன்யாசி தான் திருடன்  இறக்கக் காரணம். நான் இல்லை ஐயா.'
சந்நியாசி யிடம் மன்னன்,
 "என்ன, அந்த வண்ணான் விலகுன்னு சொன்ன போது நீ நகராமல் இருந்தாயா?",
 "-------"
 "நீ நகராமல் இருந்ததால் தானே அவன் வெளுக்க நேரம் ஆயிற்று?"
 "-------"
 'அதனால் தானே அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய துணியை தாமதித்து கொடுத்தான்?"
 '-------"
  "வரவேண்டிய துணி வரலேன்னு தானே அந்தப் பெண் குயவன் வழியில் குறுக்கிட்டாள்?"
 "-------"
 "குயவன் பெரிய குடம் செய்தது, பெரிய குடத்தில் தண்ணீர் சித்தாள் எடுத்தது, ஈரமான சுவரைக்    கொத்தனார் கட்ட காரணம், அதனால் சுவர் இடிந்து திருடன் இறக்க இவை எல்லாவற்றிற்கும்   காரணம் நீ என்பதை ஒத்துக் கொள்கிறாயா?"
 "---------"
 'இவன் எந்த பதிலையும்  சொல்லாமல்  எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டான், எனவே இவன் தான் குற்றவாளி. இவனைச்
 சிரச்சேதம் செய்யுங்கள். இது தான் என்னுடைய தீர்ப்பு. சபை கலையட்டும்."

ஹி,ஹி,ஹி,

 மன்னன் ஓரக்கண்ணால் தன்னுடைய தீர்ப்பு இப்படி இருந்தது பார்த்தாயா மந்திரியாரே  என்று வினவ, மந்திரி மனதுக்குள் அந்த சந்நியாசி ஊமையானபடியால் வாயைத் திறந்து  பதில் சொல்லவில்லை என்பதை மதிகெட்ட அரசனுக்கு எப்படி உணர்த்துவது என்று தெரியாமல்
 மன்னனைப் புன்முறுவல் பூத்தபடி சபையை விட்டு வெளியேறினார்.
 மக்களும் மன்னனுக்கு வாழ்த்து படித்தார்கள்.

 இதைத் தான் "போம் பழியெல்லாம் அமணன் தலையோடு போம்!!!!" என்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக